பக்கங்கள்

16 ஜூன் 2010

அம்மா வேடத்தில் நடிக்கவில்லை என்கிறார் சினேகா!


மலையாளப் படத்தில் அம்மா வேடத்தில் நடிப்பதாக வந்த செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்று நடிகை சினேகா கூறினார்.
மம்முட்டியுடன் மலையாளத்தில் மூன்று படங்களில் ஜோடி சேர்ந்துவிட்டார் சினேகா. ஆனால் மலையாள திரையுலகின் இன்னொரு முன்னணி நடிகரான மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அமையாமல் இருந்தது. இப்போது அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது அவருக்கு.
ஷிகார் என்ற மலையாளப் படத்தில் மோகன்லாலுக்கு முதல்முறையாக ஜோடியாக நடிக்கிறார் சினேகா.
ஆனால் அதற்குள், இந்தப் படத்தில் நடிக்கும் அனன்யாவுக்கு அம்மாவாக சினேகா நடிப்பதாக செய்தி வெளியானது.
இதைத் தொடர்ந்து இந்த செய்திக்கு சினேகா விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது:
நான் இந்தப் படத்தில் லாரி டிரைவராக வரும் மோகன்லாலை காதலித்து திருமணம் செய்துகொள்ளும் பெண் வேடத்தில் நடிக்கிறேன். மிகுந்த பொறுப்பான பாத்திரம் என்னுடையது. ஆனால் இந்த பாத்திரம் ஒரு கட்டத்தில் இறந்து விட, மோகன்லால் ஒரு பெண் குழந்தையை எடுத்து வளர்க்கிறார். அது பெரியவளாவது போல கதை அமைந்துள்ளது.
ஆனால் அதற்குள் நான் அம்மா வேடத்தில் நடிப்பதாக செய்தி பரப்பிவிட்டார்கள். படத்தில் எனது பாத்திரமே இல்லாத காட்சியிலிருந்துதான் அந்தக் குழந்தை கேரக்டர் வருகிறது. அந்தக் குழந்தை பெரியவளானதும் அனன்யா கேரக்டர் வருகிறது. இதில் எந்த இடத்திலும் நானும் அனன்யாவும் அம்மா பெண்ணாக வரும் காட்சிகள் ஒன்றுகூட கிடையாது என்பதை படத்தின் இயக்குநர் விளக்கிய பிறகே படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
எனவே நான் அம்மா வேடத்தில் நடிப்பதாக வந்த செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. அதற்கான அவசியமும் எனக்கில்லை" என்றார்.
சினேகா இப்போது தமிழில் விடியல், பவானி ஐபிஎஸ், முரட்டுக் காளை, அறுவடை, நூற்றுக்கு நூறு, வெங்கட் ராம் ஜோடியாக ஒரு படம் என 6 படங்களிலும், தெலுங்கில் இரு படங்களிலும், மலையாளத்தில் இரு படங்களிலும் நடித்து வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக