பக்கங்கள்

24 ஏப்ரல் 2010

முன்தினம் பார்த்தேன்!திரை விமர்சனம்.


சாஃப்ட்வேர் இன்ஜினீயருக்கும், நடனக் கலைஞருக்குமான காதல்தான் கதை.
சஞ்சய், சாஃப்ட்வேர் துறையில் வேலை பார்க்கும் காதல் கனவுகள் கொண்ட இளைஞன். கொஞ்சம் மாடர்னாக, அதே நேரத்தில் ஆச்சாரமான குடும்பத்துப் பெண்ணாகவும் இருக்கும் பெண்தான் அவரின் எதிர்பார்ப்பு. பூஜாவைச் சந்திக்கிறார். சஞ்சய் காதலில் விழும்போது, பூஜா பணத்தில் விழுகிறார். சஞ்சயின் எதிர்பார்ப்புக்கு எதிரான குணம்கொண்ட டான்ஸர் ஏக்தா அவரது வாழ்க்கையில் குறுக்கிடுகிறார். ஏக்தாவைக் காதலிக்க ஆரம்பிக்கிறார் சஞ்சய். முன்னாள் காதலன் மூலம் ரகசிய குழந்தை உண்டு என்று ஏக்தாவைச் சுற்றி புரளிகள். இந்த முரண்பாடுகள் ஒன்றையொன்று சந்தித்து வெட்டிக்கொள்ளும் புள்ளியில் ஏற்படும் கீறல், காதலில் விரிசலை உண்டாக்குகிறது. இறுதியாகத் தன் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் லிஸ்னாவை காதலித்துத் திருமணம் செய்கிறார் சஞ்சய். புரளி பொய் என்று தெரிந்து, ஏக்தாவைத் தேடிச் செல்கிறார் சஞ்சய். ஏக்தாவை அவர் சந்தித்தாரா என்பது இறுதிக்காட்சி!
சஞ்சய்... உற்சாகமான சிரிப்பு, காதல் குறித்த தேடலுடன் கூடிய துடிப்பு என பாத்திரத்துக்குப் பொருத்தம். ரயில்வே ஸ்டேஷனில் லிஸ்னாவைப் பார்த்துப் பதறும்போதும், ஏக்தாவிடம் பேச முடியாமல் தவிக்கும்போது நல்ல ஸ்கோர்.
மூன்று கதாநாயகிகளில் டான்ஸராக வரும் ஏக்தா மட்டும் தேறுகிறார். காதலில் தவிக்கும் போதும், காரணம் தெரியாமலேயே சஞ்சய்யைப் பிரியும்போதும் கண்களாலேயே உணர்ச்சிகளைக் கொட்டியிருக்கிறார். கதாநாயகனின் நண்பர்களுள் பொறாமை மற்றும் அலட்டல் பெண்ணாக வரும் யோகேஸ்வரி எதிர்பார்த்து ஏமாறும் இடங்களில் அசத்தியிருக்கிறார். மெதுவாக நகரும் படத்தைக் கலகலப்பூட்டி நகர்த்துவது சஞ்சய்யின் நண்பனாக வரும் சாய்பிரசாந்த். டான்ஸ் கிளாஸில் ஜோடி கிடைக்காமல் தவிக்கும்போதும், மிஸ்டர் பிஸ்டன் என்று கேர்ள் ஃப்ரெண்டைத் தேடும்போதும் தியேட்டரை அதிரவைக்கிறார் சாய்.
நாம் அதிகம் நேசிக்கிற ஒரு விஷயத்தை நாமே கொன்றுவிடுகிறோம் என்று ஆஸ்கர் வொயில்டின் பொன்மொழியைச் சொல்லி ஆரம்பிக்கிற வசனங்கள் அனைத்தும் அழுத்தமானவைகள்! இரண்டாம் பாதியில் உள்ள கலகலப்பு முதல் பாதியில் தவறுவதால் காட்சிகளின் நீளம் பொறுமையைச் சோதிக்கிறது. கதாபாத்திரங்கள் அனைத்தும் காதல், பெண், ஆண் என்று விடாமல் பேசித் தள்ளுகிறார்கள். அதைத் தவிர இளைஞர்களிடம் பேச வேற விஷயமே இல்லையா? ஏக்தாவைப் பிரிந்ததும், சஞ்சய் உடனடியாக லிஸ்னாவோடு காரணம் இல்லாமலேயே காதலில் விழுகிறார். பின்பு மீண்டும் ஏக்தாவைக் தேடித் தவிக்கிறார். ஏன் இந்தக் குழப்பம்?
தமன் சாய் இசையில் ஹாரிஸ் ஜெயராஜின் சாயல். மேற்கத்திய மெலடிகளால் கவர்கிறார். பின்னணி இசை மெலிதாகவும், இனிமையாகவும் இருக்கிறது. வின்சென்டின் கேமரா, பாடல் காட்சிகளில் வெளிநாட்டின் அழகை அப்படியே படம்பிடித்துக் காட்டியிருப்பது கொள்ளை அழகு!
நிறுத்தி, நிதானமாக ஃப்ளாஷ்பேக்கில் புதிய உத்தியில் கதை சொல்லி இருக்கிறார்கள். அதுதான் கதையின் பலம். பலவீனமும்கூட!
மனிதர்களின் வித்தியாசமான நுண்ணுணர்வுகளை நுணுக்கமாகப் பதிவு செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் மகிழ் திருமேனி. காதல் என்பது ஒருமுறைதான் வரும் என்னும் வழக்கமான சினிமா பல்லவியில் இருந்து விலகிப் பயணிக்கிறது படம். ஐ.டி. இளைஞர்களின் அசலான வாழ்க்கையைக் குறையோ, மிகையோ இல்லாமல் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக