பக்கங்கள்

16 ஜூன் 2014

இனியா வீட்டில் திருடி மாட்டிய அக்கா கணவன்!

இனியா
இனியாவின் அக்கா சுவாதிக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையே, அவர் வீட்டில் கொள்ளையடித்தது அம்பலமாகியுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த மாப்பிள்ளையை கைது செய்து 'மாமியார் வீட்டுக்கு' அனுப்பினர் போலீசார். தமிழில் பிரபல நடிகையாகத் திகழும் இனியா, கேரளாவைச் சேர்ந்தவர். இவரது சொந்த ஊர் திருவனந்தபுரம் கரமணை அருகே உள்ள மருதூர்க்க கடவு கிராமம்.இனியாவுக்கு சுவாதி என்ற அக்கா உள்ளார். மலையாள டி.வி. தொடர்களில் நடித்து வருகிறார். நடிகை சுவாதியும் ஷாபின் (வயது 32) என்பவரும் காதலித்து வந்தனர். ஷாபின் தங்கள் அளவுக்கு வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல என்பதால் நடிகை இனியாவின் பெற்றோர் ஆரம்பத்தில் இந்த காதலை ஏற்கவில்லை. ஆனால் ஷாபினைத்தான் திருமணம் செய்வேன் என்று உறுதியாக சுவாதி இருந்ததால் வேறு வழியின்றி கடந்த மே 29 - ந் தேதி, நடிகை சுவாதி - ஷாபின் திருமண நிச்சயதார்த்தம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பெரிய நட்சத்திர ஓட்டலில் கோலாகலமாக நடந்தது. இருவருக்கும் இந்த மாத இறுதியில் திருமணம் செய்யவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி நடிகை இனியா குடும்பத்தினர் இரவுக் காட்சி படம் பார்க்க சென்ற போது, அவர்களது வீட்டில் இருந்த ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் 10 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதுபற்றி கரமணை போலீசில் புகார் செய்தனர் இனியா குடும்பத்தினர். திருவனந்தபுரம் துறைமுக உதவி போலீஸ் கமிஷனர் ஸ்ரீகுமார் தலைமையிலான போலீஸ் படையினர் இந்த கொள்ளை பற்றி தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது இந்த கொள்ளையில் ஈடுபட்டது நடிகை இனியாவின் அக்கா சுவாதிக்கு நிச்சயிக்கப்பட்ட ஷாபின்தான் என்ற உண்மை வெளியாகி, அதிரவைத்தது. உடனடியாக போலீசார் ஷாபினையும் அவருக்கு உதவிய அவரது நண்பர் சஜியையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க, சுவாதியைப் பயன்படுத்த ஷாபின் முயன்றது தெரிய வந்தது. சுவாதியுடன் நிச்சயதார்த்தம் முடிந்ததுமே, அந்த வீட்டில் பணம், நகையைக் கொள்ளையிட திட்டமிட்டுள்ளார். முதலில் வீட்டுச் சாவியைத் திருடி, அதை வைத்து போலி சாவி தயாரித்துள்ளார். பின்னர் அந்த சாவியை தன் கூட்டாளிகள் சஜி, ராஜன், சஜு ஆகிய மூவரிடமும் கொடுத்து வைத்திருந்தார்.கொள்ளையடிக்க ஒரு நாளைத் தேர்வு செய்தவர், அந்த நாளில் இனியா, சுவாதி மற்றும் குடும்பத்தினர் அனைவருடனும் இரவுக் காட்சி சினிமா பார்க்க சென்றுள்ளார். வீட்டில் யாருமில்லாத அந்த மூன்று மணி நேரத்துக்குள் பக்காவாக திட்டத்தை அரங்கேற்றியுள்ளார். கொள்ளையடித்த பணத்தில் ஷாபினுக்கு வந்த பங்கு ரூ.2 லட்சத்து 51 ஆயிரமாம். மீதியை கூட்டாளிகள் பிரித்துக் கொண்டார்களாம். போலீஸ் விசாரணையில் இந்த உண்மைகளைக் கக்கியுள்ளார் ஷாபின். அவரையும் அவர் கூட்டாளி சஜியையும் கைது செய்துள்ள போலீஸ், தலைமறைவாக உள்ள ராஜன் மற்றும் சஜூவைத் தேடி வருகின்றனர். இந்த கொள்ளை மூலம், நடிகை சுவாதி திருமணம் ரத்தாக வேண்டிய நிலைக்கு வந்துவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக